சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது (ஏப்ரல் 12-புதன்கிழமை) அந்தத் தொகுதிக்குட்பட்ட இடங்களுக்கு பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவு:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னை மாவட்டத்தில் அந்தத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களுக்கு பொது விடுமுறை விடப்படுகிறது. மேலும், சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களுக்குச் சென்று பணியாற்றக் கூடிய அந்தத் தொகுதியைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வரும் 12-ஆம் தேதியன்று அளிக்க வேண்டும்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு சார்ந்த, அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளும் மூடப்பட்டிருக்கும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.