சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டது.
தீபாவின் பிரமாணப் பத்திரத்தில் அவரது கணவர் பெயர் இடம்பெறாததால், வேட்பு மனுவை ஏற்பதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது.
முன்னதாக, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை'த் தலைவர் தீபா, சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா, ஏராளமான தொண்டர்களின் ஆதரவோடு சமீபத்தில் பேரவை ஒன்றைத் தொடங்கினார். அது பேரவை என்பதால், தீபா சுயேட்சையாகவே இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
தீபாவின் வேட்பு மனுவோடு சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தனக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதில், 1 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள், 2 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள், ரூ.6.15 லட்சத்துக்கு கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது பிரமாணப் பத்திரத்தில் கணவர் மாதவனின் விவரம், சொத்து மதிப்பு, பான் எண் உள்ளிட்ட விவரங்களை தீபா குறிப்பிடவில்லை. ஆனால், வேலை தொடர்பான கேள்விக்கு மட்டும் கணவரின் வேலை வியாபாரம் என்ற குறிப்பிட்டுள்ளார். இதுதான் அதிகாரிகளுக்கு குழப்பதை ஏற்படுத்தியது.
தீபாவின் வேட்பு மனுவில் கணவர் பெயர் சில இடங்களில் விடுபட்டது குறித்து அதிகாரிகள் சந்தேகங்களை எழுப்பினர். தீபா சார்பில், பரிசீலனை நடைபெறும் இடத்தில் இருக்கும் மலரவன் அளித்த விளக்கத்தை ஏற்க தேர்தல் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் இடத்துக்கு தீபா வரவிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.