சென்னை: தமிழக அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், அந்நிறுவனம் சார்பில் இலங்கையில் உள்ள வவூன்யாவில் வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அளிப்பதற்காக கட்டப்பட்ட வீடுகளை வழங்கும் விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்.
வரும் ஏப்ரல் 9ம் தேதி மாலை கிட்டதட்ட மூன்று நான்கு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ள அந்த விழாவில் மலேசிய செனட் உறுப்பினர் விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டணி தலைவர் சம்மந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டுச்சாவி கொடுபப்தாக திட்டம்.
மறுநாள் வவூனியா சென்று வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்து மரக்கன்றுகளை நடும் திட்டம், அதன்பிறகு முல்லைத்தீவு, கிளிநொச்சி, புது குடியிருப்பு போன்ற இடங்களை பார்வையிட்டு மக்களை சந்திப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இத்தருணத்தில் மதிப்பிற்குரிய எனது அருமை நண்பர் தொல் திருமாவளவன் ஊடகங்களின் மூலமாகவும், வைகோ தொலைபேசி மூலமாகவும், வேல்முருகன் நண்பர் மூலமாகவும் பல அரசியல் காரணங்களை முன் வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளக் கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்கள்.
அவர்கள் சொன்ன காரணங்களை முழுமனதுடன் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று நான் இவ்விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்கிறேன்.
இச்சமயத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். நான் அரசியல்வாதி அல்ல. நான் ஒரு கலைஞன். அன்பு சகோதரர் திருமாவளவன் சொன்னதைப் போல மக்களை மகிழ்விப்பது தான் என்னுடைய கடமை. இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து அவர்களை மகிழவைத்து, அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால் தயவு செய்து அதை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்து விடாதீர்கள் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.