சென்னை: இரட்டை மின் விளக்கு சின்னத்தை ஓபிஎஸ் அணியினர் தொடரக் கூடாது என்று அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுக்கு ஒதுக்கப்பட்டது தொப்பி சின்னம். ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டது மின் விளக்கு சின்னம். ஆனால், அந்த அணியினர் இரட்டை மின் விளக்கு சின்னம் என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள்.
இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். அந்த சின்னத்தை அவர்கள் தொடரக் கூடாது. அப்படியே தொடர்ந்தாலும் இரட்டை மின் விளக்கு சின்னம் என்று சொல்லக் கூடாது. மின் விளக்கு சின்னம் என்று மட்டுமே சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
ஓபிஎஸ் அணியும், ஸ்டாலின் அணியும் சமூக தளங்களில் பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரட்டை மின் விளக்கு சின்னம் என்பதும் பொய்ப் பிரசாரம் தான். தினமும் ஒரு பொய்ப் பிரசாரத்தை சமூக தளங்கள் வாயிலாக அவர்கள் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.