தில்லியில் போராடும் விவசாயிகளை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் கடந்த 14 ஆம் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராடி வரும் நிலையில், மத்திய அரசும், தமிழக அரசும் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. விவசாயிகள் நலன் குறித்து சிறிதும் கவலைப்படாமல், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைக் கவர்ந்து ஆர்.கே.நகரில் எப்படி ஜெயிப்பது என்ற வியூகத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு மும்மரம் காட்டி வருகிறது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க மத்திய அரசிடம் உள்ள செயல்திட்டம் என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகும், விவசாயிகள் நலன் குறித்து அக்கறைகொள்ளாமல் மத்திய அரசு இருந்து வருகிறது.
எனவே, தமிழக முதல்வர் உடனடியாக இடைத்தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, தில்லி சென்று அங்கு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளைச் சந்தித்து பேச வேண்டும். அவர்களை அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசும் விவசாயிகளின் நலன் கருதி வறட்சி மற்றும் வர்தா புயல் நிவாரணமாக தமிழக அரசு ஏற்கனவே கோரியிருக்கும் ரூ. 62 ஆயிரம் கோடி நிதியை தமிழகத்துக்கு உடனடியாக வழங்க வேண்டும்.