பணமில்லாப் பரிவர்த்தனையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் என்.எஸ். விஸ்வநாதன் தெரிவித்தார்.
கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிட்டி யூனியன் வங்கியின் முன்னாள் தலைவர் வி. நாராயணனின் 12-ஆவது நினைவு சொற்பொழிவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் "வங்கியில் கடன் வழக்கமும், நிதியமைப்பும்' என்ற தலைப்பில் மேலும் பேசியது:
கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் செயல்படாத சொத்துகளின் விகிதம் அதிகமாக இருந்தது. வேளாண் துறையில் 8 சதமாகவும், தொழிற்துறையில் 20 சதமாகவும், சேவைத் துறையில் 9 சதமாகவும் இருந்தது. வங்கிகளின் முன்பணத் தொகையில், பெரும்பகுதி செயல்படாத சொத்துகளாக உள்ளன. கடன் பெற்றவர்கள் திவால் ஆவதற்கு முன்பு வங்கிகள் கடனைத் திரும்பப் பெறுதல் வேண்டும். மேலும், கடன் வாங்கியவரைச் சரியாக வழிநடத்த வேண்டும். தற்போதைய சூழலில், கடன் வாங்கியவர் அதன் அறிக்கையை ஆண்டுக்கொரு முறை இலவசமாகப் பெறலாம்.
இவ்வாறு ஒட்டுமொத்த நிதியமைப்பும் ஒன்றிணைந்து செயல்படுவதால் கடன் பற்றிய எண்ணம் மாறும். தவறான கடன் முறையால் ஏற்படும் வாராக்கடன் வங்கியின் லாப, நஷ்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது நிதிநிலை அறிக்கையிலும் எதிரொலிக்கும். வாராக்கடன் என்பது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்றார் அவர்.