தணிக்கை செய்த காட்சிகள் திரையிடப்படுகின்றன! நீதிமன்றத்தில் அதிகாரி அதிர்ச்சி தகவல்
திரைப்பட தணிக்கைக் குழு ('சென்சார் போர்டு') நீக்கிய காட்சிகளை திரைப்படங்களில் மீண்டும் சேர்த்து விடுகின்றனர் என்று திரைப்பட தணிக்கைக் குழு மண்டல அதிகாரி மதியழகன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த 2016 -ஆம் ஆண்டு, மயிலாடுதுறையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி திடீரென மாயமானார். இதையடுத்து, அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, மாணவியின் தந்தை சௌந்தரராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதிகாரி விளக்கம்: இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திரைப்பட தணிக்கைக் குழு மண்டல அதிகாரி மதியழகன் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
'திரைப்படங்களில் இடம்பெறும் சில காட்சிகளை நீக்கி 'ஏ' சான்றிதழ் வழங்குகிறோம். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்து 'யு' சான்று பெறுகின்றனர். எனினும் நீக்கப்பட்ட காட்சிகளை திரைப்படங்களில் சேர்த்து விடுகின்றனர். அவற்றை ஆய்வு செய்ய முடிவதில்லை; திரையரங்குகளும் அனுமதிப்பதில்லை. இவற்றைக் கண்காணிப்பதிலும், தணிக்கை வாரிய விதிகளை முழுமையாக அமல்படுத்துவதிலும் சில சிக்கல்கள் உள்ளன' என்றார் அவர்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு: இதையடுத்து, சென்சார் போர்டு விதிகளை அமல்படுத்துவதில் உள்ள சிரமங்கள், தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் திரைப்படங்களில் மீண்டும் சேர்க்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்படுகிறதா, பள்ளி மாணவர்களின் மனதை கெடுக்கும் வகையிலான படங்களை அனுமதிப்பது ஆகியவை தொடர்பான விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 3 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.