தினகரனின் தேர்தல் வாக்குறுதிகள் நம்பும்படியாக இல்லை: தமிழிசை

அதிமுக (அம்மா) வேட்பாளர் டிடிவி தினகரன் திங்கள்கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் நம்பும்படியாக இல்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை

அதிமுக (அம்மா) வேட்பாளர் டிடிவி தினகரன் திங்கள்கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் நம்பும்படியாக இல்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கங்கை அமரனை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தண்டையார்பேட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆர்.கே.நகர் மக்கள் மட்டுமில்லாமல் தமிழகமே மாற்றத்தை விரும்புகிறது. அந்த மாற்றத்தை பாஜக ஏற்படுத்தும். தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பாஜக தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
தமிழகத்தில் அதிமுக, திமுகவினால்தான் ஊழல் கலாசாரம் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தாமல் அவர்களை மயக்கும் இலவசத் திட்டங்களில் இந்த அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன.
அதிமுக (அம்மா) வேட்பாளர் டிடிவி தினகரன் திங்கள்கிழமை தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நம்ப முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளார். ஆர்.கே.நகரில் வீடு இல்லாதவர்களுக்கு 57 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு நடைமுறையில் எந்தவிதத்திலும் சாத்தியம் இல்லை. எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அளிக்கப்படும் இத்தகைய வாக்குறுதிகளை வாக்காளர்கள் நம்பப்போவதில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்றார் தமிழிசை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com