சென்னை: மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.
2 நாட்கள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று சென்னை வந்தார். அவருடன் அந்நாட்டின் சிறப்புத் தூதர் உத்மாப் எஸ் சாமி வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் எஸ் சுப்பிரமணி, தலைமைச் செயலாளர் அலி ஹம்சா உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
ஆளுநர் வித்யாசாகர ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் சென்றார். அவரை ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் வரவேற்று உபசரித்தனர்.
இந்த சந்திப்பு நட்பு ரீதியிலான சந்திப்பு என்று கூறப்படுகிறது.
கபாலி படத்திற்கு பிறகு மலேசியாவுக்கும், ரஜினிக்கும் இடையேயான உறவு மேலோங்கி காணப்படுகிறது. கபாலி கதை, மலேசிய தமிழ் மக்களை தழுவி எடுக்கப்பட்டதால் படத்தின் அநேக படப்பிடிப்பு அங்கு நடந்தது. அதனால், மலேசிய அரசே, ஷூட்டிங் நடத்த விஷேச ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும் நஜீப் ரசாக் திட்டமிட்டுள்ளார்.