கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை கடல் சீற்றம் ஏற்பட்டதையடுத்து, முக்கடல் சங்கமத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கி கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீராடினர்.
மாலை 6 மணிக்கு மேல் கடல் சீற்றம் மேலும் அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. முக்கடல் சங்கமம் பகுதியில் 15 அடி உயரத்துக்கு அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. ஆழமான பகுதியில் நீராடிய பயணிகளை கரைப் பகுதிக்குச் செல்லுமாறு கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் அறிவுறுத்தினர்.
பயணிகள் கூட்டம்: விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் அதிகாலை முதலே பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சன்னதி தெரு, காந்தி மண்டப சாலை, சூரிய அஸ்தமன பூங்கா, பேரூராட்சிப் பூங்கா, முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பகுதிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பியது.
போக்குவரத்து பாதிப்பு: கேரளத்தைச் சேர்ந்த சுற்றுலா வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் மாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை கன்னியாகுமரியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. விவேகானந்தபுரத்திலிருந்து காவல் நிலையம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன.