முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக சட்டப்பேரவையைக் கூட்டுவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
விவசாயப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி, சட்டப்பேரவையில் ஏற்கெனவே 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் எழுந்துள்ள குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பது தொடர்பாகவும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
அதிமுக இணைப்பு: அதிமுகவை இணைப்பதற்காக இரு அணிகளின் சார்பில் குழுக்கள் அமைத்தும் முறையான பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்பட்டாலும், பல்வேறு தடங்கல்கள் உள்ளன. இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தை பழனிசாமி கூட்டியிருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.