விமானப் போக்குவரத்து உள்பட சிறப்புத் திட்டங்கள் குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 11 மணிக்குத் தொடங்கிய கூட்டம், பிற்பகல் 1 மணி வரை நடந்தது.
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதல்வரின் செயலாளர்கள், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், திட்டம்-வளர்ச்சி-சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
நிதி, வருவாய், போக்குவரத்து மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட துறைகளின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றிப் பதிவு செய்யும் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு பற்றி ஆய்வு செய்யப்பட்டது. நில விற்பனை தொடர்பான வழிகாட்டி மதிப்பீடு உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
மலிவு கட்டணத்தில் விமானப் போக்குவரத்து: சாமானிய மக்களும் விமானத்தில் செல்வதற்கான திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. செயல்படாத விமான நிலையங்களுக்குப் புத்துயிர் அளிப்பது, விமானங்களில் சாமானிய மக்களும் செல்வதற்கு மாநில அரசின் சார்பில் எந்தெந்த வழிவகைகளில் உதவுவது என்பது தொடர்பாகவும், அது குறித்த கொள்கை முடிவுகளும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
அரசு அலுவல்கள் தொடர்பான ஆலோசனைகளுக்குப் பிறகு, அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசின் செயல்பாடுகள், விமர்சனங்கள் ஆகியவற்றை முன்வைக்கும் போது கவனத்துடன் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.