கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் யானைகள் முகாம்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

கொடைக்கானலில் 3-ஆவது நாளாக புதன்கிழமை பேரிஜம் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், அப் பகுதிக்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் யானைகள் முகாம்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

கொடைக்கானலில் 3-ஆவது நாளாக புதன்கிழமை பேரிஜம் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், அப் பகுதிக்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கொடைக்கானலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் அடர்ந்த பேரிஜம் வனப்பகுதி உள்ளது. இந்த பகுதி முழுவதும் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கொடைக்கானலில் அமைதியான இடம் தேடிச் செல்வோர் பேரிஜம் பகுதியிலுள்ள ஏரியைப் பார்க்கச் செல்வது வழக்கம்.

இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை மற்றும் யானைகள் நடமாட்டம் இருந்து வருவதை வனத் துறையினர் பார்த்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மேலும் வனப் பகுதிகளான கிளாவரை, ஐந்து வீடு,பாரதி அண்ணாநகர்ப் பகுதிகளிலும் யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து கொடைக்கானல் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொடைக்கானல் வனப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் அவற்றை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் பேரிஜம் ஏரிப் பகுதியிலும் யானைகள் நடமாட்டும் இருந்து வருவதால் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பேரிஜம் ஏரியைப் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யானைகள் அங்கிருந்து சென்றவுடன் மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com