கோவை: அதிமுக ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவைக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் வருகையால் பாஜக பலமடையும். தமிழகத்தில் ஆளுங்கட்சியும், ஏற்கெனவே ஆண்ட கட்சியும் இல்லாமல் மாற்றுக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை, மின்வெட்டு போன்றவை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இவற்றை ஆளுங்கட்சியால் தடுக்க முடியவில்லை. இதனால், தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறுகிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
கொலை, விபத்து மரணங்கள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் நிலையில், கொடநாடு ஒரு மர்மமான இடமாகவே இருக்கிறது. தமிழகத்தில் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து போராடுவதில் பாஜகதான் உண்மையான எதிர்க்கட்சியாக உள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம். அதிமுக ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. ஆனால், சரியான நிர்வாகத் திறமை இல்லாத ஆட்சி தொடர்ந்தால், அதுவே ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுப்பதாக இருக்கும்.
தமிழக அரசு தவறிழைக்கும் பட்சத்தில் பாஜக கண்டிப்பாக அதைக் கண்டிக்கும். அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. அதிமுகவே தற்போது பலவீனமாகத்தான் இருக்கிறது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பது சரியான தீர்ப்புதான். தமிழகத்துக்கு நீட் தேர்வு அவசியமானதுதான். பாஜக ஹிந்தியைத் திணிப்பதாகக் கூறுவதில் உண்மை இல்லை என்றார்.