ராமேசுவரம்: ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி நிலை தடுமாறி ஓடிய சுற்றுலா வேன் ஒன்று பாம்பன் பாலத்தின் கைப்பிடிச் சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வேனில் இருந்த பயணிகள் உயிர் தப்பியா சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், கல்லூரணியை சேர்ந்த 12 பேர் வேன் ஒன்றில் இன்று அதிகாலை சுற்றுலாவாக ராமேசுவரம் நோக்கி புறப்பட்டனர். வேனை ஓட்டுநர் அழகேசுவரன் (வயது 32) என்பவர் இயக்கியிருக்கிறார். அதிகாலை 5.30 மணியளவில் வேன் பாம்பன் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தது. அப்போது மழை தூறியது. இதனால் டிரைவர் வேனை மெதுவாக ஓட்டினார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி நிலை தடுமாறி ஓடிய வேன் பாலத்தின் இடதுபுறத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. மோதியய வேகத்தில் அப்படியே வலதுபுறம் நோக்கி பாய்ந்து, பாலத்தின் தடுப்புச்சுவரை இடித்தது. வேனின் முன் பக்க சக்கரங்கள் பாலத்தின் வெளியே தொங்கியபடி நின்றது.
தகவல் கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலை போலீசார் விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர். வேனில் இருந்த 12 சுற்றுலா பயணிகளும் உயிர் தப்பினர்.இன்னும் ஒரு அடி வேன் முன்னேறிச் சென்றிருந்தாலும் கடலுக்குள் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். விபத்து குறித்து பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.