சென்னை: வடபழனியில் தீ விபத்து நிகழ்ந்த குடியிருப்புக்கு நேரில் வந்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், விபத்து நிகழ்ந்த பகுதியை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
விபத்துப் பகுதியை ஆய்வு செய்து வரும் காவல்துறை மற்றும் தடயவியல் அதிகாரிகளிடம் விபத்து குறித்து ஜெயக்குமார் தகவல்களை கேட்டறிந்தார்.
சென்னை வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்பின் வாகனம் நிறுத்தும் இடத்தில் பற்றிய தீ மளமளவென்று குடியிருப்பு பகுதியில் பரவியது. இதில் புகைமூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தூங்கிகொண்டிருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 6 பேர் உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்தில் கீழ் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 21 இருசக்கர வாகனங்களும் சேதமுற்றன. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து தடவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று விபத்துப் பகுதியை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், குடியிருப்பில் அமைக்கப்பட்டிருந்த மின் வயர் தான் இந்த தீ விபத்துக்கான காரணமாக இருக்கும் என்றும், மின் வாரியத்தின் கேபிளில் எந்த கோளாறும் இல்லை என தமிழக மின் வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.