நீட் தேர்வு: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்த கெடுபிடிகளில் 10% கூட வடமாநிலங்களில் காட்டப்படவில்லை: அன்புமணி

நீட் தேர்வில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்த கெடுபிடிகளில் 10% கூட வடமாநிலங்களில் காட்டப்படவில்லை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்த கெடுபிடிகளில் 10% கூட வடமாநிலங்களில் காட்டப்படவில்லை: அன்புமணி

நீட் தேர்வில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்த கெடுபிடிகளில் 10% கூட வடமாநிலங்களில் காட்டப்படவில்லை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு(நீட்) எழுத வந்த மாணவ, மாணவியரிடம் முறைகேடுகளை தடுப்பதற்கான நடவடிக்கை என்ற பெயரில் தேர்வு அதிகாரிகள் கொடூரமான கெடுபிடியை காட்டியுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவச் செல்வங்கள் நுழைவுத்தேர்வை சரியாக எழுதமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் இச்செயல் கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்டு வந்த அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் சில மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, நீட் தேர்வுகளில் முறைகேடு நடக்காமல் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதன்படி முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக, அத்தேர்வை நடத்தும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) விதித்திருந்த கட்டுப்பாடுகள் அர்த்தமற்றவை; அபத்தமானவை. முழுக்கை சட்டை போட்டிருப்பவர்கள் கைகளில் விடைகளை எழுதி வைத்திருப்பார்கள் என்றோ, தூண்டுச்சீட்டுகளை மடிக்கப்பட்ட முழுக்கை சட்டைக்குள் பதுக்கி வைத்திருப்பார்கள் என்றோ தேர்வு அதிகாரிகள் நினைத்தால் மாணவர்களையும், சட்டையையும் சோதனை செய்து உள்ளே அனுப்பியிருக்கலாம். மாறாக, முழுக்கை சட்டையை கிழித்து அரைக்கை சட்டையாக மாற்றி அனுப்புவதும், மாணவிகளின் முக்கால் கை குர்தாவை பாதியாக கிழித்து அனுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களாகும். சுயமாக சிந்திக்கும் திறனற்ற, எந்திரத் தனமான சிந்தனை கொண்ட அதிகாரிகளால் மட்டுமே இத்தகைய அபத்தங்களை அரங்கேற்ற முடியும்.

பல இடங்களில் மாணவர்கள் கைகளில் கட்டியிருந்த கயிறுகள் அறுத்து எறியப்பட்டிருக்கின்றன. மாணவிகள் அணிந்திருந்த மூக்குத்தி, தோடுகள் கழற்றப்பட்டுள்ளன. மூக்குத்திகளை கழற்றும் போது பல மாணவிகளுக்கு மூக்கில் ரத்தம் வந்த கொடுமைகளும் நடந்துள்ளன. தோடு, மூக்குத்திக்கு தடை ஏன்? என்று கேட்டால், மின்னணு முறையில் தகவல்களை வெளியிலிருந்து வாங்கி, அதைப் பார்த்து காப்பி அடிப்பதைத் தடுப்பதற்காகத் தான் என்று அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். இத்தகைய உத்திகள் எல்லாம் எந்திரன் போன்ற திரைப்படங்களில் மட்டும் தான் சாத்தியம். அதிலும் குறிப்பாக தேர்வு மையங்களைச் சுற்றிலும் அலைவரிசை வழியான தகவல் தொடர்புகளை முடக்க ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாத இழிவுகள் ஆகும்.

கலாச்சாரம் பேசும் ஆட்சி நடைபெறும் நாட்டில் மாணவிகள் துப்பட்டாக்களை அகற்றி விட்டுத் தான் தேர்வு எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். தமிழகத்தில் அனைத்து தேர்வு மையங்களிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் இடுப்புப் பட்டைகளில் உலோகம் இருப்பதாகக் கூறி அவற்றை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளனர். இதைவிடக் கொடுமையான நிகழ்வு கேரளத்தில் நடந்துள்ளது. குன்னிமங்கலம் என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்றில் தேர்வு எழுதுவதற்காக சென்ற மாணவிகளின் உள்ளாடைகளில் உலோகக் கொக்கிகள் இருந்ததாகக் கூறி அவற்றை அகற்றும்படி  அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர். பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று மாற்றி வருவதாக மாணவிகள் கூறிய போது, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் பெண் அதிகாரிகள் முன்னிலையிலேயே மாணவிகள் உள்ளாடைகளை அகற்றியுள்ளனர். தலையைக் கூட வாரி பின்னல் போடக்கூடாது என்று கூறி வாரிய தலைமுடியை அதிகாரிகள் அவிழ்த்து விட்டுள்ளனர்.

தேர்வுக்கூடங்களின் பொறுப்பு அதிகாரிகளாக ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் சி.பி.எஸ்.இ சார்பில் ஒர் அதிகாரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவ்வாறு வந்த பொறுப்பு அதிகாரிகள் அனைவருமே வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தான் இரக்கமின்றி இத்தகைய மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இத்தகைய கொடூரமான விதிமுறைகளை வகுப்பதற்கு பதிலான நவீன கண்காணிப்பு முறைகளை சி.பி.எஸ்.இ கடைபிடித்திருக்கலாம். ஒவ்வொரு 20 மாணவர்களுக்கும் ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரால் ஒரே நேரத்தில் அனைவரையும் கண்காணிக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல் மாணவ, மாணவிகளை குற்றவாளிகளை கையாள்வது போல் நடத்தியது மன்னிக்க முடியாத செயலாகும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் காட்டப்பட்டது போன்ற கெடுபிடிகளில் 10% கூட வடமாநிலங்களில் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகளின் இந்த அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் அவமானத்தால் தலை குனிந்து, அழுதபடியே தேர்வுக் கூடத்திற்குள் நுழைந்ததை பார்க்க முடிந்தது. கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பலரால் சரியாக தேர்வை எழுத முடியவில்லை. தேர்வுகளை எழுதுவதற்கு முன் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும்; அதற்கேற்றவாறு செயல்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுத்தேர்வுகளுக்கு அறிவுரை வழங்கும் சி.பி.எஸ்.இ அதற்கு முற்றிலும் எதிரான வகையில் இப்படி ஒரு அணுகுமுறையை கடைபிடித்தது ஏன்? என்பதை தான் புரிந்து கொள்ள முடியவில்லை. முறைகேடுகளை தடுப்பதாகக் கூறிக் கொண்டு கலாச்சார மற்றும் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதை சி.பி.எஸ்.இ இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு முதல் மாணவர்களை கொடுமைப்படுத்தாத நவீன கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com