புதுதில்லி: நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சொகுசு பார்களில் மது விற்பனை செய்ய அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஜுலை இரண்டாம் வாரத்திற்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுமாறு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து மாநில அரசுகள் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து அந்த கடைகளை அகற்றியுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு உணவு விடுதி மற்றும் பார் உரிமையாளர்கள் நலச் சங்கம் என்ற அமைப்பின் சார்பில் உச்ச நீதின்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சொகுசு பார்களில் மட்டும் மது விற்பனை செய்ய அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதின்றமானது இது தொடர்பாக பல்வேறு தரப்புகளிடம் இருந்து விளக்கங்களை பெற வேண்டியிருப்பதால், இந்த வழக்கானது ஜுலை இரண்டாம் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக உத்தரவிட்டது.