முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அய்யாகண்ணு சந்திப்பு

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமையை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அய்யாகண்ணு சந்திப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கடனை வசூல் செய்ய ஜப்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் 60 வயதை கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் மகன், மகள் இருந்தாலும் ஓய்வூதியம் தர வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனுக்காக வழக்கு தொடரப்பட்டு வருகிறது. வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கரும்புக்கு நிலுவை தொகை 5 மாதமாகியும் இன்னும் தரப்படாமல் உள்ளது. அதை வழங்க வேண்டும். மாநில அரசு அறிவித்த தொகையும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஏரி குளங்களை விவசாயிகளும் தூர்வாரி மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களின் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அப்பீல் போக கூடாது என்று வலியுறுத்தினோம்.

அமராவதி ஆற்றில் இருந்து கே. பரமத்திவேலூருக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றோம்.

எங்கள் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். வருகிற 18-ஆம் தேதி மாலையில் மீண்டும் முதல்வரை சந்தித்து பேச உள்ளோம் என்றார்.

வருகிற 21-ஆம் தேதி தில்லியில் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்த அய்யாகண்ணு, அக்கூட்டத்திற்கு பிறகு விவசாயிகளின் அடுத்த போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

இதில்,10 லட்சம் விவசாயிகளை திரட்டி நாடாளுமன்றத்தையோ, பிரதமர் அலுவலகத்தையோ முற்றுகையிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அய்யாகண்ணு கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com