சென்னை: போக்குவரத்து அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் திட்டமிட்டபடி 15-ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளன.
ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை வழங்குதல் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15-ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சருடன் இதுவரை மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று போக்குவரத்து துறை அமைச்சருடன் நான்காவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையின் முடிவில் சி.ஐ.டி.யூ போக்குவரத்து தொழிற்சங்கங்க தலைவர் சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. போக்குவரத்து கழங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு அரசே காரணம்.ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு ரூ.7000 கோடி வரை தேவை. ஆனால் அரசு முதல் கட்டமாக ரூ.750 கோடி மட்டுமே வழங்குவதாக அறிவித்திருப்பது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று. புதிதாய் பேருந்துகளும் வாங்க வேண்டுமென்ற கோரிக்கையும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், முன்னரே அறிவித்தபடி திட்டமிட்டபடி 15-ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும்.
இவ்வாறு சவுந்திரராஜன் தெரிவித்தார்.