உதகையில் 121-ஆவது மலர்க் கண்காட்சி மே 19 முதல் மூன்று நாள்கள் நடைபெறுவதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்துக்கு கோடைக் காலத்தில் வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, தோட்டக் கலைத் துறை சார்பில் கோடை விழா நடத்தப்படும். இதில், முக்கியமாக ரோஜா கண்காட்சி, மலர்க் கண்காட்சி, பழக் கண்காட்சி ஆகியவை அடங்கும்.
உதகை மலர்க் கண்காட்சி உலகப் பிரசித்தி பெற்றது என்பதால் மலர்க் கண்காட்சி நடைபெறும் நாள்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருவது வழக்கம்.
உதகை தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டுக்கான 121-ஆவது மலர்க் கண்காட்சி மே 19, 20, 21 ஆகிய நாள்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, 60 புதிய ரக டேலியாக்கள், இன்கா மேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், டெல்பீனியம் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு 5 லட்சம் நாற்றுகள் நடப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக 15 ஆயிரம் தொட்டிகளில் நடப்பட்ட செடிகளில் தற்போது பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன (படம்). பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.