சென்னை: நுகர்வோருக்கு பயனளிக்கும் மனை வணிக (ரியல் எஸ்டேட்) ஒழுங்குமுறைச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான அமைப்பைக் கொண்ட இந்த குறைதீர் மன்றங்களில் பாதிக்கப்பட்டவர்களே நேரடியாக வாதிட முடியும்.
இந்நிலையில் நுகர்வோர் நீதிமன்றங்களில் சுமார் 16 ஆயிரத்திற்கும் மேலான மனை வணிகம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொதுமக்கள் பலரும் வீட்டுமனைகளை வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னைகளுக்காக நுகர்வோர் நீதிமன்றங்களுக்கே வருகின்றனர்.
இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத்தின் இயக்குநர் எஸ்.சரோஜா கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மனை வணிக ஒழுங்குமுறைச் சட்டம் 2016 (Real Estate Regulation Act-2016) வீட்டுமனைகளை வாங்குவதில் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளுக்கான தீர்வை உள்ளடக்கியுள்ளது. இந்தச் சட்டம் மே மாதம் முதல் தேதி முதல் இந்தியாவின் உத்தரப்பிரதேசம், தில்லி, மகராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் சட்டம் தொடர்பான வரைவு மட்டுமே வெளியிடப்பட்டது. குறைதீர் மன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ள நுகர்வோரின் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மனை வணிக ஒழுங்குமுறைச் சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.