சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்ட மாநகர அரசுப் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று தமிழகத்தில் விழுப்புரம், செய்யாறு, கோவை போன்ற இயங்கிய பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் செய்யப்படும். 12-ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதியோடு முடிவடைந்தது.
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவேண்டிய 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த மார்ச் 7-இல் நடைபெற்றது.
புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் மே 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன.
இதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட பேர்ச்சுவார்த்தைகளில் எந்தவித முடிவும் எட்டப்படாதநிலையில், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடனான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து திட்டமிட்டபடி திங்கள்கிழமை (மே 15) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
இதையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்காலிகமான ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 23-க்கும் அதிகமான பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் அண்ணாநகர், குரோம்பேட்டை, போரூர், ஒட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்பட்ட மாநகர அரசுப் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும் விழுப்புரம், கோபிசெட்டிப்பாளையம், செய்யாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.