சென்னை: தமிழக சட்டப்பேரவையைக் கூட்டினால் ஆட்சி நீடிக்குமா என்று ஆட்சியாளர்கள் அச்சம் கொண்டிருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக செயல் தலைவர் முக. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், உடனடியாக தமிழக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும். விவசாயிகள் பிரச்னை, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தமிழக சட்டப் பேரவையைக் கூட்டினால் ஆட்சி நீடிக்குமா என்று ஆட்சியாளர்கள் அச்சத்தில் உள்ளதாகவும் கூறினார்.
மேலும், சிதம்பரம் வீட்டில் சோதனை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சிபிஐ தெரிவித்த புகாரை சிதம்பரம் சட்ட ரீதியாக சந்திப்பார் என்று பதிலளித்தார் ஸ்டாலின்.