சென்னை: காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைக்கிறது பாஜக. அது நடக்காது என்று பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்கள் என 14 இடங்களில் இன்று காலை 7.45 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன சிபிஐ அதிகாரிகள்.
இந்த சோதனை காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிதம்பரம் இல்லத்தில் நடைபெற்று வரும் சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், சிதம்பரம் 10 ஆண்டுகளாக நிதி அமைச்சராக இருந்துள்ளார்.
ஆசியாவிலேயே சிறந்த நிதி அமைச்சர் என்ற பெயரெடுத்துள்ளார். சிறந்த வழக்குரைஞர். உலகம் ஏற்று கொள்ளப்பட்ட பொருளாதார மேதை. அப்படிபட்டவர் ஒருவரின் இல்லத்தில் இந்த சோதனையை நடத்துவதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைக்கும் பாஜக, சிதம்பரம் நற்பெயரை கெடுக்கவே இது போன்று செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதும், அனுமதி வழங்குவதும் தான் நிதியமைச்சரின் பணி. அதிகாரிகள் அனுமதி கொடுத்த போது, அமைச்சர் என்ற முறையில் அனுமதி அளித்துள்ளார்.
அவரை கொச்சைபடுத்துவதற்காகவை இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கருதுகிறோம். காங்ங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சிக்கும் பாஜக திட்டத்தின் ஒரு கட்டமாக இதுபோன்ற சோதனை நடக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சி பயப்படாது என்று கூறினார்.