ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை என மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ராஜபாளையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியள்ளதை, சிலர் பாஜக தூண்டுதலால் சோதனை நடந்ததாக பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் இந்த ஆட்சியில் தப்ப முடியாது.
திமுக தன்னை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறது. முன்பு செய்த தவறுகளை மூடி மறைக்கிறது. பிற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக என்றும் தலையிடாது.
தமிழகத்தில் நீட் தேர்வு விஷயத்தில் அரசியல் கட்சிகள் மாணவர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அதுவும் பாஜகவுக்கு வந்தால் சந்தோஷத்துடன் வரவேற்போம் என்றார்.
முன்னதாக, பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா இல்லத்துக்குச் சென்று அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றது தவறல்ல: முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது: போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தலைமைச் செயலக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றது தவறல்ல என்றார்.