பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நெல்லை-புணே சிறப்பு ரயில் என்ஜின் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மரம் விழுந்ததில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.
திருநெல்வேலியில் இருந்து மதுரை, பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு, மங்களூரு வழியாக புணேவுக்கு வாரம் இருமுறை ஏ.சி. சிறப்பு ரயில் (01322-01321) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 9.50 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. மொத்தம் 18 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
அப்போது, திடீரென தண்டவாளம் அருகே இருந்த மரம் ரயில் என்ஜின், அதைத் தொடர்ந்துள்ள பெட்டிகள் மீது விழுந்தது. இதில், என்ஜின் உள்பட 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிக்காக, பொள்ளாச்சியில் இருந்து தீயணைப்புத் துறையினரும், கேரள மாநிலம், சோரனூரில் இருந்து கிரேன், மருத்துவ வசதி கொண்ட மீட்பு வேன் அனுப்பப்பட்டிருப்பதாகவும், மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டதாகவும் பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "சேதமடைந்த 8 பெட்டிகள் தவிர்த்து மற்ற 10 பெட்டிகள் வேறொரு என்ஜின் மூலம் பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல், கரூர், ஈரோடு, கோவை வழியாக பாலக்காடு சென்றடைய உள்ளது' என்றனர்.