தலைமைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசின் தலைமைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசின் தலைமைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் மாநிலம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், பொதுமக்களின் அன்றாடத் தேவைகளுக்குக் கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, போர்க்கால அடிப்படையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று, மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த மனு ஏற்கனெவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவு இதுவரை செயல்படுத்தப்படவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றத் தவறிய தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, கே.கே. ரமேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.வி. முரளிதரன், என். சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com