சென்னை: சென்னையில் மே 18ம் தேதியான நேற்று மிகக் கடுமையான வெப்பம் பதிவாகியிருந்தது. அதிகட்சமாக 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் கூறுகையில், சென்னை விமான நிலையம் பகுதியில் நேற்று 43.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதுதான் இந்து ஆண்டில் சென்னையில் மிகவும் வெப்பமான நாளாகப் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்த புள்ளி விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதாவது, நேற்றைய வெப்ப நிலை என்னென்ன சாதனைகளை உடைத்துள்ளது என்று பார்ப்போம். நிச்சயம் வெப்ப அளவில், மே 18ம் தேதி ஒரு மைல் கல் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதாவது, கடந்த 15 ஆண்டு காலத்தில், சென்னை மற்றும் அதன் உட்பகுதியான சென்னை விமான நிலையம் பகுதியில் 43.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு, 2003ம் ஆண்டு மே 30ம் தேதி சென்னை விமான நிலையம் பகுதியில் 44.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதே இதுவரை அதிகப்படியான வெப்பநிலையாக உள்ளது.
சென்னையை மட்டும் எடுத்துக் கொண்டால், கடந்த 3 ஆண்டுகளில், நேற்றைய தினம் மிகவும் வெப்பமான நாள்தான் என்பதில் சந்தேகமே இல்லை. சென்னையின் பிற பகுதிகளில் 42.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. கடைசியாக, சென்னை நகரத்தில் கடந்த 2014ம் ஆண்டு மே 24ம் தேதி 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.
இதே நிலைதான் இன்னும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கும் என்றும் கடைசியாக ஒரு கசப்பான உண்மையைக் கூறி முடித்திருக்கிறார் பிரதீப்.
நேற்றைய வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்) :
திருத்தணி 111
வேலூர் 110
சென்னை 108
கடலூர், கரூர் பரமத்தி,
பாளையங்கோட்டை 107
திருச்சி 106
மதுரை 105
சேலம் 103
தருமபுரி 101
புதுவையில் 107 டிகிரி: புதன்கிழமை நிலவரப்படி புதுச்சேரியில் 107 டிகிரியும், காரைக்காலில் 104 டிகிரி வெயிலும் பதிவானது.