ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் படைக் கப்பல் 'ஓஷன் ஷீ ல்டு' வியாழக்கிழமை (மே 18) சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இதனை இந்திய கடலோரக் காவல்படையினர், பள்ளி மாணவர்கள் கூடி வரவேற்றனர்.
நாளை வரை...இந்தக் கப்பல் சனிக்கிழமை (மே 20) வரை சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இரு நாள்களும் இரு நாட்டு வீர்ர்கள் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பரஸ்பர பயணம்: இந்திய கடலோரக் காவல் படையினர், வெளி நாடுகளைச் சேர்ந்த கடலோரக் காவல்படையினர் நல்லெண்ண உறவுகள் அடிப்படையில் பரஸ்பரம் அந்தந்த நாடுகளுக்குச் சென்று வருவது வழக்கம்.
இதன்படி கடந்த 2004-ஆம் ஆண்டு இந்தியக் கடலோரக் காவல்படை கப்பலான ஐசிஜிஎஸ் சங்கல்ப் ஆஸ்திரேலியா சென்று வந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படைக் கப்பலான ஓஷன் ஷீல்டு வியாழக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. அப்போது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் கூடி கப்பலை வரவேற்றனர்.
பின்னர் ஆஸ்திரேலியா எல்லை பாதுகாப்புப் படை ஆணையர் ரோமன் குவேட்வைலி கப்பல் பயணத்தின் நோக்கம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியது: திறமையான கடல் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆஸ்திரேலியா மேற்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை கப்பல் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல்முறையாகும்.
இந்தப் பயணத்தின் மூலம் இந்திய கடலோரக் காவல்படையினருடனான ஈடுபாடு, உறவுகள் அதிகரிக்கும். மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நிகழும் கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் இந்தியாவின் பங்கு மகத்தானது. இரு நாடுகளிடையே மதிப்பு மிகுந்த நல்லுறவு தொடர்ந்து இருந்து வருகிறது. இதனை இக்கப்பல் பயணம் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன்.
பரந்த கடல் எல்லையைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் போதை மருந்துகள், ஆயுதங்கள், கடற்கொள்ளை, சட்டவிரோத மீன்பிடித்தல் உள்ளிட்ட கடல்சார் சட்ட விரோதச் செயல்களைக் கண்காணிப்பதுதான் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் முக்கியப் பணிகளாகும்.
ஆஸ்திரேலிய கடல் பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் கடத்தப்படும் சம்பவங்கள் பெரும்பாலும் இல்லை. ஆனால் மலாக்கா நீரிணைப்புப் பகுதியில்தான் இதுபோன்ற பிரச்னைகள் நீடித்து வருகின்றன.
இலங்கை அகதிகள் பிரச்னை: சட்டவிரோதக் கும்பல்கள் மூலம் இலங்கை அகதிகள் பல்வேறு நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக படகுகளில் அழைத்து வரப்படுகின்றனர். இதனை ஆஸ்திரேலியா அனுமதிப்பதில்லை. இதனையடுத்து அவ்வாறு வரும் அகதிகள் மீட்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டவுடன் தொடர்புடைய நாடுகளின்
தூதரகங்கள் மூலம் அந்தந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைக்கிறோம். இதில் எல்லைப் பாதுகாப்புப் படை பல்வேறு வகையில் மனிதாபிமானத்துடன்தான் நடவடிக்கை மேற்கொள்கிறோம். ஆனால் சட்டவிரோதக் குடியேற்றத்தை எப்போதும் அனுமதிக்க முடியாது என்றார் குவேட்வைலி.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலியா நாட்டின் தூதர் ஹரிந்தர் சித்து, கப்பல் கேப்டன் ஆலன் சாம்ப்கின், இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்திய உதவித் தளபதி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.