சென்னையில் கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ. 8 லட்சம் பறித்ததாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கடலூர் மாவட்டம் எஸ்.எம்.சாவடி கெடிலம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கோ.அமலேஷ் (21). பட்டயப்படிப்பு படித்திருக்கும் இவர், சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் முகநூல் மூலம் சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பொறியியல் கல்லூரி மாணவி அறிமுகம், அமலேஷுக்கு கிடைத்தது.
முகநூல் மூலம் பழகி வந்த இருவரும், நாளடைவில் நெருக்கமாயினர். இந்த பழக்கத்தினால் அமலேஷுக்கு,அந்த மாணவி தனது புகைப்படத்தை முகநூல் மூலம் அனுப்பினாராம். அந்த புகைப்படத்தின் தலைப் பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு, வேறு ஒரு பெண்ணின் ஆபாச புகைப்படத்தை அந்தக் கல்லூரி மாணவியின் தலைப் பகுதியுடன் இணைத்து ஒரு ஆபாச புகைப்படத்தை அமலேஷ் தயாரித்துள்ளார்.
கல்லூரி மாணவிக்கு அந்த புகைப்படத்தை முகநூல் மூலம் அனுப்பி, தனக்கு பணம் வேண்டும். இல்லையெனில் அந்த ஆபாச புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என அமலேஷ் மிரட்டினாராம்.
அமலேஷின் மிரட்டலுக்கு பயந்து அந்த மாணவி, பல கட்டங்களாக ரூ.8 லட்சம் வரை அவருக்கு கொடுத்திருக்கிறார். இதற்கு அமலேஷின் நண்பர்கள் துணை போயிருக்கின்றனர்.
இந்நிலையில், அமலேஷின் மிரட்டலால் விரக்தியடைந்த அந்த மாணவி, குமரன்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அமலேஷையும், அவர் நண்பர்கள் கடலூரைச் சேர்ந்த கோகுல் (25), விழுப்புரத்தைச் சேர்ந்த சந்திரக்குமார் (22), வளசரவாக்கத்தைச் சேர்ந்த வசந்தக்குமார் என்ற மைக்கேல்(24) ஆகிய 4 பேரையும் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் வளசரவாக்கத்தில் ஒரே அறையில், தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார்,மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.