கரூர் அருகே வெள்ளிக்கிழமை காரும், மணல் லாரியும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்துக் கொண்டதில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மூன்று பேர் தீக்காயமடைந்தனர்.
உளுந்தூர் பேட்டையை சேர்ந்த மாணிக்கம் மகன் சிவக்குமார் (30), திருப்பூரை சேர்ந்த தினேஷ், அருண்குமார் (21), ஈரோடு ரங்கபாளையத்தை சேர்ந்த கவின் (20) ஆகிய நால்வரும் ஒரு காரில் திருச்சியிலிருந்து திருப்பூருக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனர். காரை திருப்பூரை சேர்ந்த ஓட்டுநர் ரமேஷ் (25) ஓட்டிச் சென்றார்.
கரூர் மாவட்டம் தென்னிலை அடுத்துள்ள நல்லிப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த மணல் லாரியும், காரும்
மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் காரும், லாரியும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் காரில் சென்ற சிவக்குமார், தினேஷ், கார் ஓட்டுநர் ரமேஷ், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் வெங்கட்ரமணன் ஆகிய நான்கு பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் லாரியில் லிப்ட் கேட்டு வந்த திண்டுக்கல்லை சேர்ந்த சுந்தரராஜன் (21), காரில் வந்த கவின் மற்றும் அருண்குமார் ஆகிய மூவரும் தீக்காயங்களுடன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். விபத்து குறித்து தென்னிலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.