திருச்சி: திருச்சி அரியமங்கலத்தில் பெயிண்ட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் இன்று திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
திருச்சி அரியமங்கலத்தில் உக்கடை என்னுமிடத்தில் தனியாருக்குச் சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் அமைந்துள்ள கிடங்குகளில் பெயிண்ட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு கடைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை இந்தக் கிடங்கில் திடீரென தீப் பிடித்தது.
இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
மாநகராட்சிக்குச் சொந்தமான 2 தண்ணீர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டும் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீ விபத்தில் வேதிப்பொருள் அதிகமாக உள்ளதால் தீயை எளிதில் அணைக்க முடியவில்லை. ஆனாலும், பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்பு தீ முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.