ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை நடத்திவரும் பிரதமர் மோடியை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டாதது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
வேலூர் கோட்டத்துக்குள்பட்ட பாஜக மண்டலத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் அண்மையில் டாஸ்மாக் மதுக் கடைக்கு எதிராக போராடியவர்களில் பெண் மீது காவல் துறை அதிகாரி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு நேரில் சென்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, வேலூர் மாவட்டம், ஆம்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக வெள்ளிக்கிழமை (மே 19) போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை இரு காவலர்கள் தாக்கியிருப்பது தவறான அணுகுமுறையாகும்.
மக்களுக்காகத் தான் அரசு என்பதால், டாஸ்மாக் கடைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், கடைகளை மூட மாநில அரசு முடிவெடுக்க வேண்டும்.
தமிழக அரசியல் முறை, ஜனநாயகம் கெட்டு போய் இருப்பதாக ரஜினிகாந்த் கூறியிருப்பதில் சில நல்லவையும் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தி வருகிறார். அவரது ஆட்சியைப் பாராட்டாமல், சிலரை மேற்கோள் காட்டி ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழகம் கறைபடிய அவர் மேற்கோள் காட்டிய சிலருக்கு பங்கு உண்டு.
கிடைக்கப்பெற்ற ஆவணங்களில் முன்னாள் மத்திய அமைச்சரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயர் இருந்தது. அதனடிப்படையில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
தவறு செய்யாவிட்டால் அவர் ஏன் லண்டனுக்கு செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பினார் அவர்.
பேட்டியின் போது தேசிய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.