தமிழகத்தின் வட மாவட்டங்களில் சனிக்கிழமையும் (மே 20) அனல் காற்று வீசும்; அதிக வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிகபட்சமாக 112 டிகிரி வெயில் பதிவானது.
அதிக வெயில் பதிவாகி வந்தாலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கன்னியாகுமரியில் 34 மி.மீ., உதகையில் 33 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. திருச்சி, கரூர் பரமத்தி, தருமபுரி, கோவை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியது:
ஆந்திரக் கடல் பகுதியில் வீசும் வெப்பக்காற்றின் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனிக்கிழமையும் அனல்காற்று வீசக்கூடும். உள்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.
வெயில் நிலவரம்(ஃபாரன்ஹீட்டில்)
திருத்தணி 112
சென்னை (மீனம்பாக்கம்) 108
வேலூர், கடலூர் 107
நாகை 104
கரூர் பரமத்தி, மதுரை,
பரங்கிப்பேட்டை 102
பாளையங்கோட்டை 101