புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோயில்களின் விவரங்கள், சிறப்புகள் அடங்கிய இணையதளம், தமிழ், ஆங்கிலத்தில் தொடங்கப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாள்களில் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, 9-வது வாரமான இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து சைக்கிள் மூலம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை வழிபட்டார். பின்னர் தங்கவேல் கார்டன், லட்சுமி நகர் விரிவாக்கத்தில் உள்ள கோயில் நிலத்தையும் பார்வையிட்டார்.
அங்குள்ள குடியிருப்பு வாசிகளிடம் கிரண்பேடி பேசுகையில், புதுச்சேரியின் வளம், நலனுக்காக கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டது.
கடவுள் அருளால் நல்ல மழை பெய்து, ஏரி, குளங்கள் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டும். கோயிலுக்கு செல்வதால், இதுகுறித்த செய்திகள் வெளியாகி சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர் என்றார்.
கோயில் அறங்காவல் உறுப்பினர்களாக பதவியேற்போர், கோயில் வளாகம், குளத்தை பராமரித்தல், கணக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும், உழவாரப்பணிகள் செய்தல், கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
புதுச்சேரியில் மொத்தம் 200-க்கு மேற்பட்ட பழங்கால கோயில்கள் உள்ளன. அவற்றுக்கு ஆளுநர் மூலம் 1000 அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு உதவியாக, அறநிலையத்துறை மூலம் அனைத்து கோயில்கள் தொடர்பான புத்தகம் (டைரக்டரி) வெளியிடப்படும்.
மேலும், கோயில்கள் சிறப்புகள், விவரங்கள் அடங்கிய இணையதளம், ஆங்கிலம், தமிழில் தொடங்கப்படும். மேலும் திறன் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கோயில் பயிற்சி நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.