சென்னை: அனுமதி வழங்கப்படாத நிலையில் தடையை மீறி ஈழப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவோம் என்று மே-17 இயக்கத்தினர் அறிவித்துள்ளதால் சென்னை மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈழப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை மே-17 இயக்கத்தினர் ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரையில் நடத்தி வருகின்றனர். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்ட நிகழ்வுக்குப் பிறகு மெரினாவில் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது என்று மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
ஆனால் அனுமதி வழங்கப்படாத நிலையிலும் தடையை மீறி ஈழப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடத்துவோம் என்று மே-17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை 200-க்கும்மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாகன கண்காணிப்பும் தீவிரப்பப்படுத்தப்பட்டு வருகிறது அதனைத் தொடர்ந்து போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.