கோவை: அதிமுகவின் மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள், தொண்டர்களில் 98 சதவீதம் பேர் எங்களது அணியில்தான் உள்ளனர் என்று வனத் துறை அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். இதற்காக ஓ.பி.எஸ். அணியினர் விதித்த நிபந்தனைகளையெல்லாம் நிறைவேற்றியுள்ளோம்.
இந்நிலையில், அணிகள் இணைப்புக்கு அமைச்சர் ஜெயக்குமாரும் நானும் தடையாக இருப்பதாக மதுசூதனன் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. பேச்சுவார்த்தைக்கு வரும்படி ஓ.பி.எஸ். அணியினரை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். ஆனால் அவர்கள்தான் வரவில்லை.
ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் எங்களுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடப்போவதில்லை. அது அவ்வளவு முக்கியமான விவகாரமும் அல்ல. அதிமுகவின் 123 எம்.எல்.ஏ.க்கள், 38 எம்.பி.க்கள், 48 மாவட்டச் செயலர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட 98 சதவீதம் பேர் எங்களது அணியில்தான் உள்ளனர்.
எனவே, அடுத்த 4 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சிதான் நடக்கும்.
அதிமுகவின் பொருளாளராக பொதுச் செயலர் சசிகலாவால் நியமிக்கப்பட்ட நான், சட்டப்படி எனது பணிகளை செய்து வருகிறேன்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கும் அதேநேரம், தமிழகத்தில் அடிப்படை அரசியல் கட்டமைப்பு சரியில்லை என்று அவர் கூறியிருப்பதை ஏற்க முடியாது.
தமிழகத்தில் வறட்சி காரணமாக யானைகள் இறக்கவில்லை. வயது முதிர்வு, நோய்கள் காரணமாகவும், ரயில்களில் அடிபட்டும்தான் அடிக்கடி உயிரிழக்கின்றன என்றார் அவர்.