குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் காஞ்சிபுரம் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் சங்கரா பல்கலைகழகத்தில் மே 24-இல் நடைபெறும் விழாவுக்கு, இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நாளை மறுநாள் (மே 24) வருகை தர இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் குடியரசுத்தலைவர் காஞ்சிபுரம் செல்ல இருப்பதாக கூறப்பட்டது.
கல்லூரி விழாவுக்குப் பின்னர், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜபெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிரார்த்தனை செய்ய உள்ளதாகவும், சங்கர மடத்துக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி, இந்து அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி வரதராஜபெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் ஆகிய இடங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வந்தார்.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தேதியில் வெளிநாட்டு தலைவர் ஒருவர் இந்தியா வர இருப்பதால் பிரணாப் முகர்ஜியின் காஞ்சிபுரம் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.