மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவிலிருந்து மீண்டது.
போதிய மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்தது. குடிநீர் தேவைகளுக்காக தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 19.65 அடியாக சரிந்தது. விவசாயிகளும், மேட்டூர் அணை மீனவர்களும் கவலையடைந்தனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், உபநதியான பாலாறு நீர் பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை வினாடிக்கு 153 கனஅடியில் இருந்து 847 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று திங்கள்கிழமை காலை 19.72 அடியாக உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 4.02 டி.எம்.சியாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரிப்பதால் விவசாயிகளும், மீனவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.