சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டமானது நாளை மறுநாள் (வியாழன்) மதியம் மூன்று மணி அளவில், முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்பு, இன்றுடன் அதிமுக அரசு தனது முதலாவது ஆண்டினை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டமானது மதியம் மூன்று மணி அளவில், முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று மாசத்தங்களில் நடைபெறும் நான்காவது தமிழக அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.
இந்த கூட்டத்தில் விளைநிலங்களில் வீட்டுமனைகளை பதிவு செய்வது தொடர்பான சட்ட திருத்தம், நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.அத்துடன் தமிழக அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றுலிருந்து அதிமுக கட்சி எம்.எல்.ஏக்கள் 8 பேர் முதல்வரை சந்தித்து எம்.எல்.ஏக்கள் கூ ட்டத்தினை கூட்டுமாறு வலியுறுத்தி வந்தனர். அதே போல தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் பெறுவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை மதியம் தில்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அடுத்த மாதம் இரண்டாவது வாரம் மானிய கோரிக்கைகளை குறித்து விவாதிப்பதற்காக தமிழக சட்டசபை கூட்டம் கூட உள்ளது. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில்தான் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.