குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உதகைக்கு செவ்வாய்க்கிழமை வருகை தருகிறார்.
உதகையிலுள்ள லாரன்ஸ் பள்ளியின் 159-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவையிலிருந்து பகல் 12 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்கு பகல் 12.20 மணிக்கு பிரணாப் முகர்ஜி, வருகிறார். அங்கிருந்து கார் மூலம் லவ்டேல் பகுதியிலுள்ள லாரன்ஸ் பள்ளி வளாகத்துக்கு செல்லும் பிரணாப் பகல் 1.30 மணிக்கு விழாவைத் தொடக்கி வைக்கிறார்.
70 நிமிடங்கள் அங்கிருந்த பின்னர் பகல் 2.40 மணிக்கு லவ்டேலிலிருந்து கார் மூலம் புறப்பட்டு தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்து அங்கிருந்து உடனடியாக கோவை திரும்புகிறார்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து லவ்டேல் லாரன்ஸ் பள்ளி வளாகம் வரை சுமார் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவரின் வருகைக்காக உதகையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி தீட்டுக்கல் முதல் லவ்டேல் வரை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் மேற்பார்வையில் திங்கள்கிழமை ஒத்திகை பார்க்கப்பட்டது.