ஆசிரியர் பணியிட மாறுதல்: மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அரசாணை
ஆசிரியர் பணியிட மாறுதலில் மாற்றுத் திறனாளிகளுக்கு இட முன்னுரிமை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த விவரம்:
ஆசிரியர் பணியிட மாறுதலில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த 2-ஆம் இட முன்னுரிமை, 6 ஆம் இடத்துக்கு நிகழாண்டு தள்ளப்பட்டது. இதற்கு மாற்றுத் திறனாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க மே 22 ஆம் தேதியன்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர்-ஊழியர் மாநில பிரிவு வரவேற்று, நன்றி தெரிவித்துள்ளது.