சென்னை: பாலில் ரசாயனம் கலக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக சர்வ கட்சி குழுவைக் கொண்டு நிறுவனங்களில் நேரடி ஆய்வுக்கு தயாரா என்று தனியார் பால் நிறுவனங்களுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சில பால் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் ரசாயனம் கலக்கப்படுகிறது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது.
நேற்று நான் கூறியது போன்று தமிழகத்தில் எல்ல நிறுவனங்களும் அல்ல; சில பால் நிறுவனங்கள் மட்டுமே தாங்கள் விற்பனை செய்யும் பாலில் ரசாயனம் கலக்கின்றன. அந்த நிறுவன முதலாளிகளின் மனசாட்சிக்கு தாங்கள் தவறு செய்வது தெரியும். அவ்வாறு இல்லையென்றால் தனியார் பால் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளுக்கு சமூக ஆர்வலர்களும் கொண்ட சர்வ கட்சி குழுவைக் கொண்டு நேரடி ஆய்வுக்கு தயாரா?
இந்த விவகாரம் தொடர்பாக அரசு கண்டிப்பாக ஆய்வு செய்யும். மாவட்ட அளவில் அதிகாரிகள் ஏற்கனவே இதற்கான தகவல் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நிறுவனங்களில் பால் பொருட்களில் கலப்படம் இல்லை. பாலில் மட்டுமே ரசாயன கலப்பு உள்ளது.
நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னால் பொது மக்களுக்கு இடையூறு வராமல் முழுவதுமாக பால் விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் தயாராக உள்ளது. பால் பவுடர் தயரிப்பிற்கு பதிலாக பாலாகவே விநியோகம் செய்து விடுவோம்.
பால் தட்டுப்பாடு என்பதற்காக மக்கள் விஷத்தை குடிக்க முடியுமா? குற்றசாட்டு தவறு என்று பால் முகவர்கள் சங்கம் கூறுவது தவறு. அவர்கள் கமிஷனுக்கு வேலை செய்பவர்கள். அதற்காக மக்கள் உயிரோடு விளையாடக் கூடாது
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.