ரமலான் நோன்பையொட்டி, கஞ்சி தயாரிக்கத் தேவையான அரிசியை வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டுமென்று இஸ்லாமியர்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இந்தக் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்கள் அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 4,900 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.12.6 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனால், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயனடையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.