காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவங்குணம் கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி 1,330 திருக்குறள்களையும், அதற்கான பொருளோடு ஒப்பித்து சாதனை படைத்துள்ளார்.
செய்யூர் வட்டம், சிறுவங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்பாபு. இவர் நெற்குணப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜனரஞ்சனி. இத்தம்பதியின் மகள் எம்.கனிஷ்கா (5).
இவர் 3 வயதில் இருந்தே திருக்குறள் மீது அதிக ஈடுபாடு கொண்டு, மழலை மொழியில் திருக்குறளை சொல்லி வந்துள்ளார். மகளின் ஆற்றலை அறிந்த மகேஷ்பாபு, திருக்குறளில் பல்வேறு சாதனைகளை செய்து வரும், செங்கல்பட்டைச் சேர்ந்த திருக்குறள் எல்லப்பனிடம் மேலும் திருக்குறள்களை கற்றுக்கொள்ள சேர்த்துவிட்டார்.
கடந்த ஓராண்டு தீவிர பயிற்சியின் காரணமாக சிறுமி கனிஷ்கா, அனைத்துத் திருக்குறள்களையும், அதன் பொருளோடு ஒப்பிக்கிறார்.
மேலும், ஒரு குறளின் கடைசி வார்த்தையை சொன்னால், அந்தக் குறளை முழுமையாகச் சொல்வது, அதிகார எண்ணை சொன்னால் அதற்கான குறளைச் சொல்வது என கனிஷ்கா அசத்தி வருகிறார்.
இவரது சாதனைகளை அறிந்த திருச்சி திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை, சென்னை குரோம்பேட்டை திருக்குறள் மன்றம் ஆகியவை பரிசுகளை வழங்கிப் பாராட்டியுள்ளன. தொடர்ந்து மாவட்ட அளவில் திருக்குறளை ஒப்பிக்கும் போட்டியில் கனிஷ்கா கலந்து கொள்ள உள்ளார். 5 வயது சிறுமி கனிஷ்கா திருக்குறளில் சாதனை படைத்து வருவது, இப்பகுதி பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.