தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என். பெரியசாமி இன்று காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என். பெரியசாமி(78) சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது. முரட்டு பக்தன் என கருணாநிதியால் அழைக்கப்பட்ட என். பெரியசாமி நெருக்கடி நிலையில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர்.
தட்டார்மடத்தை சேர்ந்த பெரியசாமி 30 ஆண்டுகளாக செயலாளராக இருந்தவர். 1986ல் நகராட்சி தலைவராக தேர்வானவர் என். பெரியசாமி. 1989, 1991 ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றிபெற்று தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தார். என். பெரியசாமி மகள் கீதாஜீவன் தற்போது தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.