தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 305 இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இந்த இடங்களுக்கு தற்போது நடைபெற்று வரும் கலந்தாய்விலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் (புதிதாக எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியையும் சேர்த்து) மொத்தம் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 13 கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் மொத்தம் 1,188 முதுநிலை இடங்கள் உள்ளன. இதில், 792 எம்.டி., எம்,எஸ். படிப்புக்கான முதுநிலை இடங்கள். மீதம் உள்ள 396 இடங்கள் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கானது.
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள கூடுதல் 305 இடங்களால் எம்.டி., எம்.எஸ். படிப்புக்கான உள்ளிட்ட முதுநிலை மருத்துப் படிப்புகளுக்கான இடங்கள் 1,097 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை உயர் அதிகாரி கூறியது: மொத்த முதுநிலை மருத்துவ இடங்களில் சுமார் 40 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் நிகழ் கல்வியாண்டுக்கான கலந்தாய்வில் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலானோர் பயனடையக் கூடும்.
இதுதவிர, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் (super-speciality courses) கூடுதல் இடங்கள் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம் என்றார்.