மத்திய, மாநில அரசுகள் சாதனைப் பட்டியல்களை வெளியிட்டாலும், மக்களுக்கு வேதனை தரும் ஆட்சிகளாக உள்ளன என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழக அரசின் நூறு நாள் சாதனை என்பது மட்டுமல்ல, 6 ஆண்டு காலச் சாதனையே ஒன்றும் கிடையாது. எனவே, நூறு நாள் சாதனை என்பது வேதனையாகத்தான் இருக்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, 3 ஆண்டுகளாக அவர்கள் கூறிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் துயரைப் போக்குவோம் என்றனர். ஆனால், போராடுகிற விவசாயிகளைக் கூட அவர்கள் சந்திக்க மறுக்கின்றனர். மீனவர்களின் பிரச்னையை தீர்க்க தனி அமைச்சகமே உருவாக்குவோம் எனக் கூறினர். இலங்கையிலிருந்து மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களுடைய படகுகளை இலங்கை அரசு விடுவிப்பது கிடையாது. எனவே, மூன்றாண்டு கால ஆட்சி என்பது மக்களுக்கு வேதனை தரக்கூடிய ஆட்சி.