சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரின் சொத்துகளையும் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அவர்களது 68 வகையான சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய சொத்துகளையும் கையகப்படுத்த வேண்டுமென பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சொத்துக் குவிப்பு வழக்கின் வரம்புக்குள் வரக்கூடிய சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், தூத்துக்குடி உள்பட 6 மாவட்டங்களில் உள்ள 68 சொத்துகளும் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் 6 மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளதாகத் தெரிகிறது. இந்த கையப்படுத்தும் பணிகள் முடிந்ததும், அது தொடர்பான அறிக்கையை தமிழக அரசு பெங்களூரில் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்.